ஒரு சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ எந்த உணவையாவது சாப்பிட்டு விட்டு வேறு எதாவது சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, ஜீரணக் கோளாறு என்ற பல பிரச்சனைகள் வரும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டு வருவது வயிற்றுக்கு நன்மைதானே. அப்படிப்பட்ட வயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை என பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர், மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது. பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற உணவுகள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே இவற்றை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.



No comments:
Post a Comment